தமிழ் தாய் மொழி என்பதால் தானோ இருபதாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் செம்மையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது நான் வாழ...

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

சாப்பிட போறீங்களா...?

திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகளில் கடைசியாக நாம் பாயாசம் என இனிப்பு வகை உணவுகளை சாப்பிடுகிறோம். ஆனால் இது தவறான  முறையாகும். இனிப்பு வகைகளையே முதலில் எடுக்க வேண்டும். நாம் சாப்பிடும் முன்பு பசி காரணமாக வாயு அதிகரித்து காணப்படும். அப்போது  நாம் இனிப்புகளை உண்பதால் அது வாயுவை தணித்து விடும். குறிப்பாக பழங்களை சாப்பிடும் முன்பே உண்பது நல்லது. நமது உடல் தேவையான  உணவை ஜீரணித்த பின்னர் எஞ்சிய உணவுகள் வயிற்றில் தங்கியிருக்கும். அப்போது பழங்கள் தங்கியிருந்தால் அவை அழுகி வேதியியல் மாற்றம்  காரணமாக இதர நோய்களை உருவாக்கும்.



தண்ணீர் குடிக்கும் முறை

சிலர் சாப்பிடும் முன்பு தண்ணீர் குடிப்பார்கள். சிலர் சாப்பிட்ட அரைமணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பார்கள். ஆனால் ஆயுர்வேத கூற்றுப்படி  சாப்பிடும்போது இடையிடையே அளவோடு தண்ணீர் அருந்த வேண்டும்.


பீடா

உணவருந்திய பின்னர் புகையிலை சேர்க்காமல், வெற்றிலை, பாக்கு மற்றும் சுண்ணாம்பு சேர்த்து அதனை வாயில் மென்று சாரை விழுங்குவது  ஜீரணத்திற்கு நல்லது. பசுநெய் அளவோடு சேர்ப்பது மிகவும் நல்லது.



தூக்கம் வேண்டாம்

நாம் உணவு அருந்தியதுமே அனைத்து உடல் உறுப்புகளும் ஜீரணிப்பதில் ஈடுபடுவதால் சோர்வு ஏற்பட்டு தூக்கம் கண்களை தழுவும். ஆனால்  அவ்வாறு தூங்கினால் உடல் உறுப்புகள் ஜீரணம் செய்வதில் தடங்கல் ஏற்படும். எனவே உண்டவுடன் தூக்கத்தை தவிர்ப்பது நல்லது. மேலும் இரவு  உணவை படுப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே எடுக்க வேண்டும். கோடைக் காலத்தில் அக்னி (ஜீரணசக்தி) அதிகரிப்பதால் உண்டவுடன் சிறிது  நேரம் தூங்கலாம்.


“தெய்வம் சார்ந்த பராரை வேம்பு”

வேம்பு தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும், வாழ்வோடும், வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்து விட்ட ஒன்றாகும். சங்க இலக்கியங்களிலேயே தெய்வம் சார்ந்த பராரை வேம்புஎன்று வேம்பு சிறப்பிக்கப்படுகிறது. இலை, பட்டை, விதையிலுள் தைலம் பலவகையான பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. ஸ்டெப்டோமசீன் (Streptomycinie) போன்ற மருந்துக்கும் கட்டுப்படாத காசநோய் கிருமிகள் வேப்ப எண்ணெய்க்கு கட்டுப்படுவதாக ஆய்வு அறிக்கைகள் சொல்லுகின்றன.



லக்னோவிலுள்ள கிங் ஜார்ஜ் (King George) மருத்துவக் கல்லூரியில் செய்த ஆய்வின் மூலம் வேப்பிலை மோசமான தோல் நோய்களையும் கட்டுப்படுத்தும், மேலும் குடல் புழுக்களையும் அகற்றும் ஆற்றல் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேகாலாயவில் உள்ள பழங்குடி மக்கள் இதய நோய்க்கும், காச நோய்க்கும் வேப்பம் பழங்களையும், இலைகளையும் பயன்படுத்துகிறார்கள்.வேப்பெண்ணெய்க்கு விந்துவிலுள்ள உயிர் அணுக்களைச் செயல் இழக்கச் செய்யும் ஆற்றல் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கண்டறிந்துள்ளது.

வேப்பிலையிலுள்ள குயிர் சிடின் என்னும் சத்து Bacteria-க்களைக் கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.வேப்ப எண்ணெய்யை சிதைத்து வடித்துப் பெறும் பைரோனிமின் மூலம் Rocketகான உந்துவிசை மாற்று எரிப்பொருளைப் பெறலாம் என்கின்றனர்.எலிகளுக்கு வேப்பிலை சாற்றைக் கொடுத்து ஆராய்ந்ததில் அது கருத்தரிக்கும் ஆற்றலை 11-வது வாரத்தில் முற்றிலும் இழந்து விட்டதை அறிந்தனர். சாறு கொடுப்பதை நிறுத்தி விட்டால் மீண்டும் கருத்தரிக்கும் ஆற்றல் பெற்று விடுவதையும் கண்டுள்ளனர்.

நிலத்தின் அமிலத் தன்மையை நிலைப்படுத்தும் தன்மையிலும், காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதிலும் வேம்பு தன்னிகரற்றது.வேப்பம் பூவிலிருந்து அடுத்த சத்து 3 வகையான நுண்புழுக்களைக் கட்டுப்படுத்துவதாக சித்திக் ஆலம் என்னும் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.சுற்றுச் சூழலை பாதுகாத்து நிலைப்படுத்தும் ஆற்றல் வேம்பிற்கு உள்ளது. காற்றில் கலந்துள்ள தூசியை வடிகட்டும் திறனும், Anthro cyanine என்னும் நச்சு வாயுக்களை ஈர்த்துக் கொள்ளும் பண்பும் வேம்பிற்கு இருப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றனர்.

வேம்பு வெளியிடும் பிராகிபிடின் என்னும் வேதிப்பொருள் காற்றில் கலந்து மனிதனையும் தாவரங்களையும் தாக்கும் கிருமிகளை இயங்க விடாமல் தடுத்து அழிக்கிறது என்று Dr.சக்சேனா கண்டறிந்துள்ளனர்.
வேப்பம் விதைக்கும், எண்ணெய்க்கும் பிண்ணாக்கிற்கும்-123க்கும் மேற்பட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வேம்பு Meliazia தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

வேறுபெயர்கள்

அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்திரம், பிசுமந்தம், வாதாளி.

வேப்பிலை
புழு, பூச்சிகளால் நேரிடும் துன்பங்களை ஒழிக்கும்.
வேப்பங்கொழுந்தும், எள்ளும் சேர்த்து அரைத்துப் பூசிவர ஆறாத நாட்பட்ட புண்கள் ஆறும்.
வேப்பிலையை கற்ப முறைப்படி சாப்பிட்டு வர எந்த நோயும் அணுகாது.
வேப்பிலைச் சாறு + பழச்சாறு கலந்து படுக்கபோகும் முன் அருந்த ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.



வேப்பம் பூ
பூவை குடிநீரிட்டு குடிக்க குன்ம நோய் தீரும்.
வேப்பம் பூவைத் தலையில் வைக்க ஈறும் பேணும் தீரும்.
பூச்சாறு + நெல்லிக்காய் சாறு கலந்து தர எந்த நோயும் அணுகாது, தோல் பளபளக்கும், இரத்தம் சுத்தமாகும்.
வேப்பம்பூ + வேப்ப எண்ணெய் கலந்து காய்ச்சி காதுக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தக் காதில் உள்ள பூச்சிகள் வெளிப்படும். காது வலி, காது சீழ் மாறும்.



வேப்பங்காயும் பழமும்
தோல் நோய் தீர்க்கும்.



வேப்ப விதை
மூலம், தோல் நோய், சூதக சன்னி, குடல் கிருமி, நரம்புப் பிரிவு நீங்கும்.
விதை + கசகசா + தேங்காய் பால் சொறி, சிரங்கு, நமைச்சல், தேமல் தீரும்.



வேப்ப நெய்
துஷ்ட புண்கள் தீரும்.

ஆராத இரணங்கள் தீரும்.

வேப்பம் பட்டை
வேப்பம் பட்டை + திப்பிலி குடிநீர் இடுப்பு வாதம், கீல் வாதம் தீரும்.
வேப்பம் பட்டை கஷாயம் குட்டம் தீரும்.
100 வயதான வேப்பமரப் பட்டையை நிழலில் உலர்த்திச் சூரணித்து பாலில் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். நோய் அணுகாது.
வேப்பம்பட்டைத் + தூள் கரிசாலை + மல்லிச் சாறு 7 முறை பாவனை செய்து 1 மண்டலம் தேனில் உண்ண உடல் கருங்காலி மரம் போல் வலிமை உடையதாகும். விந்து கட்டும்



வேப்ப மர பிசின்
மேக நோயைப் போக்கும்.
வேப்பமுத்து, மிளகு, கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து எண்ணெய்யில் கலந்து தலைக்குத் தேய்த்து முழுகி வரப் புழுவெட்டு மாறும். முடி செழித்து வளரும்.

அதிகமான மருந்துகளைப் பயன்படுத்தினால், மரபியல் குணங்களை நிர்ணயிக்கும் குரோமோசோம்கள் சிதைவுறுவதாக தற்கால ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. வேம்பு குரோமோசொம்களை பாதிக்காமல் நோய்க் கிருமிகளை மட்டும் அழிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.
நம் வீடுகளில் வேம்பு வளர்ப்பது ஐதீகமாகக் கருதப்பட்டாலும், அதன் தத்துவம் என்னவென்றால் வேம்பை சுற்றி 10 நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ளதென்றும், காற்றானது தூய்மையுறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

பலம் சேர்க்கும் பயிறு வகைகள்...

பயிறு வகைகளுக்கு நம் உடலில் பலம் அளிக்கும் தன்மை அதிகம். அவற்றில் புரதச் சத்து மிகுதியாக இருப்பதால், அசைவ உணவுக்கு இணையாகக் கருதப்படுகின்றன.  நன்றாக முதிர்ந்தப் பயறு வகைகளில் குறைவான ஈரப்பதமும் அதிகச் சத்துக்களும் இருக்கும். முளைவிட்டப் பயறு வகைகளில் அதிக அளவு நீர்ச் சத்தும், வைட்டமின் சத்துக்களும் இருக்கின்றது. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், ரிபோஃபிளேவின் போன்ற சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலுக்கு நல்ல ஊட்டத்தைக் கொடுக்கும்.



குறிப்பு:

ஜீரண சக்திக் குறைபாடு, வயிறு சம்பந்தப்பட்டப் பிரச்னை, சிறுநீரகப் பாதிப்புக் கொண்டவர்கள் சில பயறு வகைகளை குறைவான அளவில் சாப்பிடுவதே நல்லது. முளைக்கட்டியப் பயறு வகைகளில் 'யூரிக் ஆசிட்அதிகம் இருப்பதால், மூட்டு வலி (Gout Disease) வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு வயிற்றுப்போக்கும் ஏற்படலாம். முளைக்கட்டியப் பயறை வெந் நீரில் மிதமாக வேகவைத்துச் சாப்பிட வேண்டும். இதில், நார்ச் சத்து அதிக அளவில் இருப்பதால், சாப்பிட்டதும் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

பெரும்பாலும் நாம் கொண்டாடும் பண்டிகைகளில் சுண்டல், பொரியல், சாம்பார் என ஏதாவது ஒரு விதத்தில் நாம் பயிறு வகைகளை உண்கிறோம். அவற்றின் பலனை அறிந்து உண்டால் இன்னும் சிறப்புதானே….!!!

துவரைப் பயறு

உடலுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும், மலச் சிக்கல் பிரச்னை வராமல் தடுக்கக்கூடியது. இதில், மெக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. நார்ச் சத்து, கால்சியம் பாஸ்பரஸ், பீட்டா கரோட்டின், வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், வைட்டமின் - சி, நார்ச் சத்து ஆகியவை ஓரளவு இருக்கின்றன. புரதம், மாவுச் சத்து, கலோரி, இரும்பு, கோலின், ஆக்சாலிக் ஆசிட் ஆகியவை குறைந்த அளவில் இருக்கின்றன. அதிகம் வேக வைக்கவேண்டியது இல்லை. இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் குறைந்த அளவு சேர்த்துக் கொள்ளலாம்.



பச்சைப் பயறு

எலும்பு வளர்ச்சிக்கும், ரத்த ஓட்டத்துக்கும், வளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகளின் தசைகளை வலுவாக்குவதற்கும் ஏற்றது பச்சைப் பயறு. மலச் சிக்கலைப் போக்கும். இதில், புரதம், கலோரி, பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், பொட்டாஷியம், நார்ச் சத்து ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. மாவுச் சத்து, கொழுப்பு, கோலின், பீட்டா கரோட்டின், கால்சியம், இரும்பு, மெக்னீஷியம், தாமிரம், சோடியம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். பொட்டாஷியம், பாஸ்பரஸ் அதிகமாக இருப்பதால், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.


கொள்ளு
எலும்புக்கு நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்; தசைகள் வலுப் பெறும். உடலில் உள்ள கொழுப்பை அகற்றி, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதில், புரதம், கலோரி, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், பொட்டாஷியம் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருக்கின்றன. ஆக்ஸாலிக் ஆசிட் இருப்பதால், அதிகம் சாப்பிடக் கூடாது. அவ்வப்போது, கொள்ளு ரசம் வைத்துச் சாப்பிடலாம். சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் சாப்பிட வேண்டாம். மற்றபடி எல்லோருக்கும் ஏற்றது. புரதச் சத்து அதிகம் இருப்பதால் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.



கொண்டைக்கடலை

ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும். வயிற்றில் வரும் புற்றுநோயான இன்டெஸ்டினல் கேன்சர் (Intestinal cancer)  போன்ற நோய்களைத் தடுக்க வல்லது. இதில் புரதம், மாவுச் சத்து, கலோரி, ஃபோலிக் ஆசிட், நார்ச் சத்து மற்றும் தாது உப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், சோடியம், பொட்டாஷியம், தாமிரம், துத்தநாகம் ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. கொழுப்பு ஓரளவும் கோலின், பீட்டா கரோட்டின் ஆகியவை சிறிதளவும் இருக்கின்றன. வெள்ளை நிறக் கொண்டைக் கடலையைக் காட்டிலும் சிறிய அளவிலானக் கறுப்பு நிறக் கொண்டைக் கடலையில் அதிக அளவு நார்ச் சத்து இருக்கிறது. முளைக்கட்டிய கொண்டைக் கடலையில் இருக்கும் ஹார்மோன் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் சாப்பிடலாம். சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள், கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.



மொச்சைப் பயறு

சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்; மலச்சிக்கலைப் போக்கும்; இதில், புரதம், மாவுச் சத்து, கோலின், பாஸ்பரஸ் ஆகியவை மிக அதிகமாக இருக்கின்றன. இரும்பு, கால்சியம், சோடியம், பொட்டாசியம், வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், நார்ச் சத்து ஆகியவை ஓரளவு இருக்கின்றன. சிலருக்கு மொச்சை சாப்பிட்டால், வாயுப் பிரச்னை ஏற்படும். அவர்கள் தவிர்ப்பது நல்லது. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் மிகக் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், வளரும் குழந்தைகள் ஆகியோர் தினமும் சாப்பிடலாம்.


  
பட்டாணி

காய்ந்த பட்டாணியில் புரதம், மாவுச் சத்து, கலோரி மற்றும் தாது உப்புக்களான இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீஷியம், சோடியம், பொட்டாஷியம், தாமிரம், துத்தநாகம், கோலின் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. நார்ச் சத்து ஓரளவு இருக்கிறது. பீட்டா கரோட்டின், வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், ஃபோலிக் ஆசிட் ஆகியவை குறைந்த அளவே இருக்கின்றன. பொட்டாஷியம் அதிகமாக இருப்பதால் சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். பச்சைப் பட்டாணித் தோலில் கால்சியம், இரும்புச் சத்து அதிகமாக உள்ளன. புரதம், மாவுச் சத்து, கலோரி, வைட்டமின் - சி ஆகியவை மிகவும் குறைவாகவே இருக்கின்றன. வாயுப் பிரச்னை இருப்பவர்களும், ஜீரண சக்தி குறைவாக இருப்பவர்களும் இதனைத் தவிர்ப்பது நல்லது. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் சாப்பிடலாம். குறைந்த அளவில் சாப்பிடுவதே நல்லது.



காராமணி

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றக் கூடிய தன்மை இதற்கு உண்டு. வயிற்றில் புற்றுநோய் வராமல் தடுக்கும். தென் மாவட்ட மக்கள் இதைத் தட்டைப் பயறு என்று அழைப்பார்கள். இதில் பொட்டாசியம் மிகவும் அதிகமாக இருக்கிறது. புரதம், கலோரி, மாவுச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், ஃபோலிக் ஆசிட், கோலின் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. தாமிரம், மெக்னீஷியம், துத்தநாகம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், பீட்டா கரோட்டின் ஆகியவை குறைந்த அளவில் இருக்கின்றன. வாயுப் பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.


 ராஜ்மா

தசைகளை நன்றாக இறுகச்செய்வதோடு, மலச் சிக்கலையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இதில் புரதம், கலோரி, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் உண்டு. மெக்னீஷியம், துத்தநாகம், தாமிரம், நார்ச் சத்து ஓரளவு இருக்கின்றன. சோடியம், பொட்டாஷியம் ஆகியவை மிகக் குறைந்த அளவே இருக்கின்றன. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது. உடலை வருத்தி உடற்பயிற்சி செய்பவர்கள், கர்ப்பிணிகள், சர்க்கரை மற்றும் இதய நோயாளிகள் அனைவரும் சாப்பிட ஏற்றது.



சோயா


கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்; பெண்களுக்கு ஹார்மோன் பிரச்னைகளைப் போக்கும்; வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. புற்றுநோயைத் தடுக்கவல்லது; இதில், புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஃபோலிக் ஆசிட், ஒமேகா 3 வகை கொழுப்பு ஆகியவை அதிகமாக இருக்கின்றன. மாவுச் சத்து, தைமின், ரிபோஃபோமின், பீட்டா கரோட்டின், மெக்னீஷியம், தாமிரம், துத்தநாகம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. பால் குடிக்காதவர்களுக்கு சோயா பால் கொடுக்கலாம். சோயா சிலருக்கு ஜீரணப் பிரச்னையை ஏற்படுத்துவதால், நன்றாகச் சமைத்துச் சாப்பிடுவதே நல்லது. வளரும் குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. நாள் ஒன்றுக்கு 20 கிராம் மட்டுமே சாப்பிட வேண்டும்.


தொடர்பு வடிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *