தமிழ் தாய் மொழி என்பதால் தானோ இருபதாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் செம்மையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது நான் வாழ...

வெள்ளி, 18 ஜூலை, 2014

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு


கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை. பலருடைய உழைப்பின் பலனாக உருவாக்கும் ஒன்று. ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல் அந்த கிணறு எல்லா காலத்திலும் வற்றாமல் தண்ணீர் தர வேண்டும். இத்தனை தேவைகளயும் மனதில்  கொண்டு எப்படி நம் முன்னோர்கள் கிணறு வெட்டினார்கள் தெரியுமா?

நிலத்தில் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் வாய்ப்புக்கள் இருக்கும் என்று நம்புகின்றனர்.  .
அது நல்ல நீரூற்று என அறிய நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடுவர். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில்
கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள் .

கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று எப்படி அறிந்து இருப்பார்கள்? கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம். அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு, ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.

சகல வசதிகளும் இருக்கும் இக்காலதிலேயே ஆளுக்கொரு ஆழ்துளை குழாய் வெட்டி சுயநலமாக வாழும் போது, எந்த வசதியும் இல்லாதக் காலத்தில் ஊருக்கு ஒரு கிணறு வெட்டி ஒற்றுமையாய் வாழ்ந்து இருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.  இந்த வியத்தகு ஆராய்ச்சியை எப்படி யூகித்து இருப்பார்கள்? நினைக்கும் போதே ஆச்சரியமாக இருக்கிறது…. 


தினம் ஒரு குறள்


குறள் – 19, அதிகாரம் – வான்சிறப்பு

குறள்:
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்                                                                                 



விளக்கம்:

இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்

தொடர்பு வடிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *